கடற்கரையில் உள்ள கிணற்று நீர் நன்னீராக இருப்பதற்கான காரணம்



கடலில் உள்ள நீர்  உவர்நீராக உள்ளபோதிலும், கடற்கரையோரங்களில் உள்ள கிணறுகளில் உள்ள நீர் சுத்தமான நன்னீராகவே உள்ளது. இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதனை இக்கட்டுரை விளக்குகின்றது. 

என்னுடைய விரிவுரையாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்கள் மற்றும், இணையங்களில் தேடிப்பெற்ற விடயங்களையும், நேரடியாக குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக களத்தில் அவதானித்த விடயங்களையும் கொண்டே இக்கட்டுரையினை வரைகின்றேன்.
இக்கட்டுரையில் ஏதாவது சிறு பிழைகள் இருந்தால் நீரியல் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் தமது கருத்துக்களை பின்னூட்டமாக வழங்குவதன் மூலம் இக்கட்டுரையின் வளர்ச்சிக்கு உதவமுடியும்.

கரையோரத்தில் உள்ள கிணற்று நீர் நன்னீராக இருப்பதற்குரிய காரணத்தை அறியுமுன்னர் நாம் இங்கு நீரியல் வட்டம் மற்றும் தரைக்கீழ் நீர்  முதலிய விடயங்களை அறிய வேண்டும்.
நீரியல் வட்டம்
திண்மம்,திரவம், வாயு ஆகிய நிலையிலுள்ள நீரானது நிலம், கடல், வளிமண்டலம் ஆகியவற்றுக்கிடையில் ஒரு வட்ட வடிவில் செயற்படும் நிலையினை பொதுவாக நீரியல் வட்டம் எனப்படுகின்றது. அதாவது நீரானது ஆவியாகுதல், ஒடுங்குதல், படிவுவீழ்ச்சி, கழுவுநீரோட்டம் ஆகிய செயன்முறைகளுக்கூடாக ஒரு வட்ட வடிவில் இயற்குவதனை இது குறித்து நிற்கின்றது. அந்தவகையில் நீரியல் வட்டத்தில் பிரதானமாக நான்கு செயன்முறைகள் முக்கியம் பெறுகின்றன.
1.    ஆவியாதல்
2.    ஒடுங்குதல்
3.    படிவுவீழ்ச்சி
4.    கழுவுநீரோட்டம்



1. ஆவியாதல் - சமுத்திரம், உள்நாட்டு நீர்நிலைகள், உயிரினங்கள் ஆகியவற்றில் உள்ள  நீரானது வெப்பத்தின் காரணமாக வாயு நிலைக்கு மாற்றப்பட்டு மேலெழும் செயன்முறை ஆவியாதல் எனப்படுகின்றது. பொதவாக சமுத்திரங்கள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகள் ஆகியவற்றில் இருந்து திரவ நிலையிலிருந்து வாயுவாகும் செயன்முறை ஆவியாதல் எனவும், உயிரினங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து நீரானது வாயுவாக மேலெழுதல் ஆவியுயிர்ப்பு எனவும் குறிப்பிடப்படுகின்றது. ஆவியாகின்றபோது நிலமேற்பரப்பில் இருந்து .
2. ஒடுங்குதல் - ஆவியாதல் மூலம் வளிமண்டலத்தை அடைந்த நீராவியானது குளிர்வடைந்து திண்மமாகவோ அல்லது திரவமாகவோ மாற்றமடையும் செயன்முறை ஒடுங்குதல் எனப்படுகின்றது. ஆவியாதல் மூலம் வளிமணடலத்தையடைந்த நீராவியானது நிரம்பிய வளியாக மாறி பணிபடு நிலைய அடைகின்றது. பனிபடுநிலையை அடைந்த நீராவியானது மேலும் குளிர்வடைவதனாலேயே அவ்வளி கொண்டுள்ள ஈரப்பதனானது திண்மமாகவோ திரவமாகவோ மாற்றமடைகின்றது. வளிமண்டலத்தில் உள்ள உப்பு, கந்தகம், தூசுக்கள் முதலிய உட்கருக்களைச் சுற்றியே நீராவியானது திரவமாகவோ அல்லது திண்மமாகவோ ஒடுங்குகின்றது.
3. படிவுவீழ்ச்சிஒடுங்குதல் மூலம் திரவமாகவோ அல்லது திண்மமாகவோ மாற்றமடைந்த நீராவியானது நிலத்தை நோக்கி பல்வேறு வடிவங்களில் வீழ்கின்றபோது படிவுவீழ்ச்சி எனப்படுகின்றது. உட்கருக்களைச் சுற்றி ஒடுங்கிய நீராவினாது முகில்களாக கூழ்நிலையில் காணப்படும். முகிற்துளிகள் ஒன்றையொன்று இணைந்து பாரமானதான பெரிய திரண்மழை முகில்களைத் தோற்றுவிக்கின்றன. இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட பாரமான திரண்மழை மகில்களே பூமியை நோக்கி படிவுவீழ்ச்சியாக வீழ்கின்றது. படிவுவீழ்ச்சி என்று கூறும்போது , மழைவீழ்ச்சி, தூறல், மழைப்பனி, பனிகலந்தமழை, ஆலி, உறைபனி எனப் பல்வேறு வடிவங்களில் நிலத்தை அடைகின்றது.
4. கழுவுநீரோட்டம் - பல்வேறு படிவுவீழ்ச்சி வடிவங்களாக புவிமேற்பரப்பை வந்தடைந்த நீரானது, சமுத்திரத்தை  சென்றடைகின்ற செயற்பாடு கழுவு நீரோட்டம் எனப்படுகின்றது. அதாவது நிலத்தின் மேல் நதிகளிற்கூடாகவோ அல்லது தரைக்கீழான நகர்வின் மூலமோ அது சமுத்திரத்தை அடைகின்றது. இதன் மூலம் ஏற்கனவே நிலமேற்பரப்பிலிருந்து ஆவியாக்கப்பட்ட நீரிலும் பார்க்க அதிகமாகக் கிடைத்த நீரானது சமுத்திரத்தை அடைந்து சமநிலையை பேணுகின்றது. இதனை கீழேயுள்ள நீர்ச்சமநிலையை விளக்கும் படத்திலிருந்து அறிந்து கொள்ளமுடியும்.


தரைக்கீழ் நீர்

படிவுவீழ்ச்சியின் மூலம் நிலத்தில் கிடைக்கும் நீரின் ஒரு பகுதி நிலத்தின் பாறைகளுக்கூடாக ஊடுருவி நிலத்தின் கீழே சேமிக்கப்பட்டிருக்கும்போது அதனை தரைக்கீழ் நீர் என அழைக்கின்றோம். தரைக்கீழ் நீh சேகரிக்கப்படும் பகுதிகள் நீர் தாங்குபடுக்கை என அழைக்கப்படுகின்றது. நீர் தாங்கு படு;க்கையானது பிரதான நீh தாங்கு படுக்கை, உப நீர் தாங்கு படுக்கை என இரண்டாக காணப்படுகின்றது.
பிரதான நீர் தாங்கு படுக்கை என்பது, நிலமேற்பரப்பில் கிடைக்கும் மழைநீரானது வண்மையான பாறைகளுக்கூடாகக் கசிந்து தேங்கியிருக்கும் பகுதியினைக் குறிக்கும். இப்பகுதியில் தேங்கியுள்ள நீரை  நிரந்தர தரைக்கீழ் நீர் எனவும் அழைப்பர். இப்பகுதியில் துளையிடுவதன் மூலமே ஆட்டிசியன் கிணறுகள் மூலம் நீர் பெறப்படுகின்றது.
உபநீர் தாங்கு படுக்கை என்பது, நிலமேற்பரப்பில் கிடைக்கும் மழைநீரானது மணல் போன்ற மென்மையான நிலமேற்பரபிற்கூடாக ஊடுருவி நீரை உட்புகவிடாத பாறைப்படைகளுக்கு மேல் தேங்கியிருக்கும் நீhப் பகுதியை குறிப்பிடுவர். இப்பகுதியில் தேங்கியிருக்கும் நீரை தற்காலிக தரைக்கீழ் நீர் எனவும் அழைப்பர்.

நீர்தாங்கு படுக்கையின் மேல் எல்லையானது நீர்ப்பீடம் என அழைக்கப்படுகின்றது. நீர்ப்பீடத்தின் எல்லையானது மாற்றமடையக் கூடிய ஒன்றாகும். படிவுவீழ்ச்சியின் ஒரு பகுதியானது தரைக்கீழ் நீராக நகர்ந்து சமுத்திரங்களை அடைகின்றது.

கரையோரத்தின் நீரியல் நிலைமைகள்.

கரையோரப்பகுதியில் நீரின் இரசாயண இயல்புகளின் அடிப்படையில் இருவேறுபட்ட நீர்தாங்கு படுக்கைகளை அவதானிக்க முடியும். ஒன்று நன்னீரைக் கொண்ட நீர்தாங்குபடுக்கை, இரண்டாவது உவர்நீரைக் கொண்ட நீர்தாங்குபடுக்கை என அவை இரண்டாகக் காணப்படுகின்றது. நிலத்தைச் சார்ந்து அமைந்திருக்கும் நீர்தாங்கு படுக்கையானது நன்னீரைக் கொண்டதாகவும், கடலைச் சார்ந்ததாக அமைந்திருக்கும் நீர் தாங்குபடுக்கையானது உவர்நீரைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.


  நன்னீரும் உவர்நீரும் கலந்துள்ள பகுதியானது நன்னீர், உவர்நீர் இடைமுகம் என அழைக்கப்படும். இந்த இடைமுக எல்லையானது  மாற்றமடையக் கூடியது. குறிப்பாக நன்னீர் தரைக்கீழ் நீர்மட்டமானது குறைவடைகின்றபோது, இடைமுக எல்லானது நிலத்தை நோக்கி நகரும். அதேபோன்று மாறாக நன்னீர் தரைக்கீழ் நீர்மட்டமானது அதிகரிக்கின்றபோது கடல்பகுதியை நோக்கி நகரக்கூடியது.

 
கடற்கரையோரப்பகுதிகளில் உள்ள நிலப்பகுதியில் கிணறு ஒன்றை அமைக்கின்றபோது அது நன்னீராக இருப்பதற்குப் பிரதான காரணம் , நிலத்திற்குக் கீழ் காணப்படும் நீர்தாங்கு படுக்கையானது நன்னீராகக் காணப்படுவதனாலேயாகும். அருகிலிருப்பது உவாத்தன்மையுடைய கடல்நிராக இருந்தாலும், தரைக்கீழ் நன்னீர் நீர்தாங்கு படுக்கையிலிருந்தே கிணற்றுக்கு நீர்கிடைக்கின்றது.

கடற்கரையோரப் பகுதிகளில் தரைக்கீழ் நீராக சமுத்திரத்தை நோக்கி நகர்ந்து வருகின்ற நன்னீரின் அழுத்தமானது கடலை நோக்கியதாகக் காணப்படும். அதுமட்டுமன்றி நன்னீரின் நீர்மட்டம் (நீர்ப்பீடம்) உயர்வாகவும் காணப்படுவதனால் உவர்நீரின் ஊடுருவலானது தரைக்குள் வருவது கட்டுப்படுத்தப்படுகின்றது. இதேவேளை வரட்சியான காலத்தில் அல்லது தரைக்கீழ் நன்னீர் நீர்ப்பீடம்  தாழ்த்தப்படுமானால் உவர்நீர் ஊடுருவல் இடம்பெறும் . இதனால் கிணறுகளில் உவர்த்தன்மை அதிகமாக இருக்கும். குறிப்பாக இலங்கையின் யாழ் குடா நாட்டில் நன்னீர் நீர்ப்பிடம் மனித நடவடிக்கைகளினால் தாழ்த்தப்படுகின்றமையானது அப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் உவர்த்தன்மை ஊடுவலுக்கு வழிவகுத்துள்ளது.

ஒளிப்படம் 1:-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கழுவன்கேணி கடற்கரைப்பகுதி


 
ஒளிப்படம் 2:-
யாழ்ப்பாண மாவட்டத்தின் நகுலேஸ்வர ஆலயத்தின் கீரிமலைத் தீர்த்தம் (நன்னீர் ஊற்று)

[Article By :- Akshayan BA (Hons) special in Geography  - Email:- akshayansm@gmail.com]