விவசாய நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்

விவசாய நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைவதில் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அந்தவகையில் விவசாய நடவடிக்கைகளில் காலநிலைக்காரணிகள், தரைத்தோற்ற காரணிகள், சமூக பொருளாதார காரணிகள் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன.
காலநிலைக் காரணிகளாக மழைவீழ்ச்சி, வெப்பநிலை, காற்று, ஈரப்பதன், ஒளி ஆகியனவும் தரைத்தோற்றக் காரணிகள் எனும்போது நிலத்தின் தன்மை (சமவெளி, தொடரலைநிலம், சாய்வு நிலம்), மண்ணின் தன்மை முதலியனவும், பொருளாதாரக் காரணிகள் எனும்போது மூலதனம், மனிதஉழைப்பு, போக்குவரத்து, சந்தை முதலிய காரணிகள் காணப்படுகின்றன.

மழைவீழ்ச்சி
பயிர்ச்செய்கைக்கு மிக இன்றியமையாத காரணியாக மழைவீழ்ச்சி காணப்படுகின்றது. விவசாயத்தில் மழைநீரை நம்பியோ அல்லது தேங்கியுள்ள நீரையோ நம்பியோ பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மழைவீச்சிழ்ச்சியானது மழைமானியின்மூலம் அளவிடப்படுவதுடன், மில்லிமீட்டர் என்ற அலகில் அளவிடப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் பருவப்பெயர்ச்சி மழை, மேற்காவுகை மழை, சூறாவளிமழை ஆகியவற்றின் மூலம் மழை கிடைக்கின்றது.

இலங்கையில் வடமேல் பருவப்பெயர்ச்சிக்காற்று, தென்மேல் பருவப்பெயர்ச்சிக்காற்று ஆகியவற்றின் மூலம் பருவமழை கிடைக்கின்றது. இலங்கையின் தென்மேல் தாழ்நிலப்பகுதியில் மே – செப்டம்பர் வரையான காலப்பகுதியில் தென்மேல்பருவப்பெயர்ச்சிக் காற்றின் மூலமான மழை கிடைப்பதுடன், இலங்கையின் உலர்வலயப்பகுதிகளுக்கு நவம்பர் – ஜனவரி வரையிலான காலப்பகுதியிலும் வடகீழ்பருவப் பெயர்ச்சிக்காற்றின் மூலமான மழை கிடைக்கின்றது.

அதிக வெப்பம் நிலவும் காலங்களில் நீரானது ஆவியாகி திடீரன மாலைவேளைகளில் இடிமின்னலுடன் தோற்றம்பெறும் மழை மேற்காவுகை மழை அல்லது உகைப்பு மழை எனப்படுகின்றது. பொதுவாக மேற்காவுகை மழையானது இலங்கையின் தென்மேல் தாழ்நிலப்பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சியைக் கொடுப்பதுடன், இடைப்பருவக்காற்றுக் காலங்களான மார்ச், ஏப்ரல் மற்றும் ஒக்டோபர், நவம்பர் ஆகிய காலப்பகுதிகளிலும் மழையைக் கொடுக்கின்றன.

சூறாவளி மழையானது வங்காள விரிகுடாப்பகுதியில் தோற்றம்பெறுகின்ற தாழமுக்க வலயங்களினால் விருத்தி செய்யப்பட்டு உருவாகும் மழையினைக் குறித்து நிற்கின்றது. நவம்பர் மாதங்களில் சூறாவளி மழையானது கிடைப்பதுடன், இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு அதிகமழையைக் கொடுக்கின்றன.

இலங்கையின் மழைவீழ்ச்சிக்கோலத்திற்கேற்ப பருகாலப் பயிர்கள் மேற்கொள்ளப்படுவதுடன், பிரதேசத்திற்கென விசேட பயிர்களும் பயிரிடப்படுகின்றன.

வெப்பநிலை
ஒருபிரதேசத்தின் வளிமண்டத்தில் காணப்படும்  வெப்பத்தின் அளவு வெப்பநிலை எனப்படுகின்றது. அயனமண்டலத்தில் இடம்பெறும் விவசாயங்களில் அதிகளவில் வெப்பநிலை செல்வாக்குச் செலுத்தாதபோதிலும், இடைவெப்பவலயத்தில் வெப்பநிலையானது செல்வாக்குச் செலுத்துகின்றது. வெப்பநிலையை அளவிடுவதற்கு வெப்பமானி பயன்படுத்தப்படுவதுடன், பாகை செல்சியஸ் எனும் அலகுகளில் அளவிடப்படுகின்து.

வெப்பநிலையின் அளவானது அதிகமாக இருக்கின்றபோது நீர்ஆவியுயிர்ப்பிற்கு உள்ளாவதுடன், குறைவாக உள்ளபோது தாவரங்களின் வளர்;ச்சியில் பாதிப்பையும், உற்பத்திக்குறைவையும் ஏற்படுத்துகின்றது.

காற்று
அசைகின்ற வளியானது காற்று எனப்படுகின்றது. மழைவீழ்ச்சியின் வடிவத்தை பாதித்தல்,  முகில்களின் ஒடுங்குதல் போன்றவற்றில் செல்வாக்குச் செலுத்துவதனால் தாவரங்களின் வளர்ச்சியில் முக்கியமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றது. காற்றானது இரண்டுவகையான அளவீடுகளைக் கொண்டுள்ளது. அதாவது காற்றின்வேகம், காற்றின் திசை ஆகினவே அவையாகும். காற்றின்வேகமானது காற்றுவேகமானி என்ற கருவியின்மூலம் அளவிடப்படுவதுடன், காற்றுத்திசைகாட்டிமூலம் காற்றின் திசை அளவிடப்படுகின்றது.

மிதமான காற்றினால் ஒளித்தொகுப்புவீதம் அதிகரித்தல், மகரந்தச் சேர்க்கைக்கு உதவுதல், வித்துக்களின் பரவலுக்கு உதவுதல் வெப்பநிலை மற்றும் ஈரப்பதனைக் கட்டுப்படுத்தல் என சாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளது. பலமான காற்றினால் தாவரங்கள் முறிந்து விழுதல், பூக்களும் பழங்களும் விழுதல், மண்ணரிப்பிற்கு துணை நிற்றல் என பாதகமான விளைவுகளையும் கொண்டுள்ளது.

ஈரப்பதன்
ஓரலகு வளியில் காணப்படும் நீராவியின் அளவே ஈரப்பதன் எனப்படுகின்றது. தனியீரப்பதன், சாரீரப்பதன் என ஈரப்பதனானது இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது. ஒரு வளித்துணிக்கையானது கொண்டுள்ள நீராவியின் அளவிற்கும், அத்துணிக்கை கொள்ளக்கூடிய அதிஉச்ச நீராவியின் அளவிற்கும் இடையிலான நூற்று விகிதமே சாரீரப்பதன் எனப்படுகின்றது.

ஈரப்பதனை அளவிடுவதற்கு ஈரமானி பயன்படுத்தப்படுவதுடன், ஈரப்பதனின் அளவீடானது நூற்றுவீதத்தில் குறிப்பிடப்படும். ஈரப்பதனானது பயிர்ச்செய்கையில் பல்வேறு வழிகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

ஈரப்பதன் குறைவடையும் சந்தர்ப்பத்தில் கருக்கட்டல்வீதம் குறைவடைவதுடன்,  நோய்கள் பீடைகள் பரவலடைதல் , களஞ்சியப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுதல் போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சூரியஒளி
புவியில் இடம்பெறும் எல்லா பௌதிக, உயிரியல் செயன்முறைக்கும் தேவையான சக்தியை அளிக்கும் கூலமாக சூரியன் விளங்குகின்றது. தாவரங்களின் ஒளித்தொகுப்பு முதலிய பல்வேறு விடயங்களில் சூரிய ஒளி செல்வாக்குச்செலுத்துகின்றது. சூரிய ஒளியைப் பொறுத்தவரையில் ஒளிச்செறிவு, ஒளியின்தன்மை, ஒளியின் கால அளவு ஆகிய முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன. ஒளியின் செறிவு எனும்போது ஒளியின் கதிர்வீச்சின் அளவினையும், ஒளியின் தன்மை எனும்போது ஒளிகொண்டுள்ள நிறங்களையும், ஒளிக்காலஅளவு எனும்போது நாளொன்றுக்கு ஒளி கிடைக்கும் மணித்தியாலங்களின் அளவினையும் குறித்து நிற்கின்றது.

சூரிய ஒளியை அளவிடுவதற்கு சூரிய ஒளிர்வுமானி பயன்படுத்தப்படுகின்றது. சூரிய ஒளிக்காலத்தின் அடிப்படையில் தாவரங்களை ஒளிநடுநிலைத் தாவரங்கள், ஒளித்தூண்டற்பேறுடைய தாவரங்கள் என இரண்டாக பிரிக்கப்படும். சூரிய ஒளியானது தாவரங்களின் நடவடிக்கைளில் பல்வேறு வகையில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

தாவரங்களின் ஒளித்தொகுப்பு, சுவாசித்தல், பூத்தல், வித்துமுளைத்தல், தாவரங்களின் நிறப்பொருள் தயாரித்தல் முதலியவற்றில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மண்காரணி
பாறைகளிலிருந்து சிதைவடைந்த நுண்ணிய துகள்களே மண் எனப்படுகின்றது. பயிர்ச்செய்கை ஊடகமாக வேறுபலபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றபோதிலும், 99 சதவீதமான பயிர்கள் மண்ணிலேயே வளர்கின்றன.

பயிர்ச்செய்கையைப் பொறுத்தவரையில் மண்ணினுடைய பௌதிக, இரசாயன இயல்புகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. பௌதிக இயல்புகள் எனும்போது மண்நிறம், மண்சேர்வைகள், மண்துளைவெளி, மண் இழையமைப்பு போன்ற விடயங்களும், இரசாயண இயல்புகளில் குறிப்பாக கார, அமிலத்தன்மைகளும் விளங்குகின்றன.

இலங்கையில் காணப்படும் மண்வகைகளும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துபனவாக உள்ளன. குறிப்பாக வண்டல் சார்ந்த மண்ணைக் கொண்ட ஆற்றுவடிநிலப்பகுதிகளில் அதிகளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ள்படுகின்றது. 

தொழிலாளர் வசதி
விவசாய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதில் தொழிலாளர் வசதியும் முக்கியமானது. குறிப்பாக அபிவிருத்தியடைந்த வரும் நாடுகளில் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது. ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளில் பெருமளவில் இயந்திரங்களின் பயன்பாடு காணப்படுவதனால் குறைந்தளவிலேயே தொழிலாளர்களின் தேவை காணப்படுகின்றது. ஆசிய நாடுகளில் காணப்படும் அதிகரித்த சனத்தொகையானது குறைந்த செலவில் தொழிலாளாகளைப் பெறமுடிகின்றது. பெருந்தோட்டப் பயிர்ச்செசய்கை போன்றவற்றில் அதிக தொழிலாளர்கள் தேவைப்படுகின்றது.

மூலதனம்
விவசாய நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் மூலதனமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக வர்த்தக நோக்குடன் பெருமளவில் மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளில் மூலதனம் என்பது முக்கியம் பெறுகின்றது. இயந்திரசாதனங்களை கொள்வனவு செய்தல், விவசாய உள்ளீடுகளை கொள்வனவு செய்தல், நிலத்தைப் பண்படுத்தல் போன்றவற்றிற்காக அதிகளவில் நிதி தேவைப்படுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகள் வர்த்தக நோக்குடன் பெருமளவில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மூலதன வசதி முக்கிய பங்கு வகிக்கின்றது.

சந்தை வசதி
வெற்றிகரமான விவசாய நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சந்தை வசதியும் முக்கியமாகும். உற்பத்திகளை சந்தையின் தேவையறிந்த மேற்கொள்கின்றபோதே விவசாய நடவடிக்கையில் வெற்றிகரமாக தொடர்ந்தும் மேற்கொள்ளமுடியும். குறிப்பாக சந்தையில் செயற்கை இறப்பர் வந்த பின்னர், தற்போது மலேசியா போன்ற நாடகளில் இறப்பருக்கு பதழிலாக செம்பனை என்னும் எண்ணெய்த் தாவரம் பயிரிடப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் தற்போது கழுத்துறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் செம்பனை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

போக்குவரத்து
விவசாய நடவடிக்கைகளில் உள்ளீடுகளை விவசாய நிலங்களுக்கு கொண்டு வருவதற்கும் உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கும் போக்குவரத்து வசதி என்பது முக்கியமானதாகும். சந்தைக்கும், பண்ணைகளுக்குமான போக்குவரத்து வசதிகள் விரத்தி பெற்ற நாடுகளில் உற்பத்திகளை விரைவாக சேதாரமின்றி கொண்டு வரமுடிகின்றது. வளர்முக நாடுகளில் பண்ணைகளுக்கான போக்குவரத்து வசதிகள் மோசமானதாகக் காணப்படுகின்றமையால் விளைவுகளில் இழப்புகள் ஏற்படுகின்றது.  

அரசகொள்கை
அரசாங்கங்களின் ஆதரவும் விவசாய நடவடிக்கைகளின் விருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. குறிப்பாக நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், புதிய ஆராய்ச்சிகளின் மூலம் நவீன முறைகளை அறிமுகப்படுத்தல், மானிய முறைகளில் உதவிகளை வழங்குதல், அனர்த்தங்களினால் இழப்பு ஏற்படுகின்றபோது மீட்பு நிதிகளை வழங்கல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாக அரசாங்கங்கள் உதவிவருகின்றன.

தொழிநுட்பம்
இயந்திர சாதனங்களின் பயன்பாடு, நீhப்hசன நடவடிக்கைகள், நவீன விதை மற்றும் முறைகள் என்பன தொழிநுட்ப நடவடிக்கைகளாக விவசாய நடவடிக்கைகளில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக மேற்கொளள்ப்படுகின்றன. புதிய விதையினங்களை அறிமுகப்படுத்தல் குறிப்பாக பசுமைப்புரட்சி, மரபணு தொழிநுட்பம் போன்றவற்றின் மூலமாக விவசாயத்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டன. அதேபோன்று தொழிலாளர் தேவையைக் குறைப்பதற்புகும், விரைவாக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காககவும் இயந்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. அnதுபோன்று வரண்ட பிரதேசங்களில் வருடம் முழுவதும் பயிர்செய்வதற்கும் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கும் நீர்ப்பாசன தொழிநுட்பங்கள் கைகொடுக்கின்றன.

(Article by :- AKSHAYAN)