தரைக்கீழ் நீரானது புவியின் உட்பாகத்தில் கொதிக்கும் நிலையிலுள்ள மக்மா(Magma) படையின் வெப்பத்தால் வெப்பரூட்டப்படுவதனாலேயே வெப்ப நீரூற்றுக்கள் (Thermal or Hot Springs) உருவாக்கம் பெறுகின்றன.
புவியிலுள்ள சில துவாரங்கள் ஊடாக வெப்பநீரும், நீராவியும் வெளியேறும் துவாரத்தை கீசர் (Geyser) என அழைப்பர். இவை பெரும்பாலும் எரிமலை வலயங்கள்(Volcanic Zone) உள்ள பகுதிகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் சிலவேளைகளில் சாதாரண பகுதிகளிலும் இத்தகைய நீராவியை வெளியேற்றும் மையங்கள் காணப்படலாம்.
இவ்வாறு நீராவியை வெளியேற்றும் மையப்பகுதிகளில் காணப்படும் தரைக்கீழ் நீரானது வெப்பமூட்டப்பட்டு தரைக்கு மேலே ஊற்றாக வெளிப்படும்போது அவை வெப்பநீரூற்றுக்கள் எனப்படுகின்றன. பொதுவாக வெப்பமான நீரைக் கொண்ட நீரூற்றுக்கள் வெப்பநீரூற்றுக்கள் (Thermal Springs) எனவும், நீரானது கொதித்து பீறிட்டு பாயும்போது அவை கொதிநீரூற்றுக்கள் (Hot Springs) எனவும் சிலவேளைகளில் அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவின் வையோமிங் மானிலத்தில் உள்ள மஞ்சள் கல் தேசிய பூங்காவில் (Yellow Stone National park) அமைந்துள்ள நீரூற்று வெப்பநீரூற்றுக்கு சிறந்த உதாரணமாகும்.
இலங்கையில் 200 இற்கும் மேற்பட்ட வெப்பநீரூற்றுக்கள் காணப்படுகின்றபோதிலும், இதுவரையில் 10 இற்கும் மேற்பட்ட வெப்பநீரூற்றுக்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், பார்வையிடக்கூடிய வகையிலும் அமைந்துள்ளன.
1) திருகோணமலை மாவட்டம்
• கண்ணியா
• றண்கிரியா(உல்பொத்த , கோமரன்கடவல)
2) அம்பாறை மாவட்டம்
• மகா ஓயா
• வகாவா (வறான்கல)
• கபுறல்ல
• கிவுலகம (ஜயந்திவ, எம்பிலின்ன)
3) பொலநறுவை மாவட்டம்
• மதாவௌ
• நெலும்வௌ(கல்வௌ, மடவவா)
• முத்துகல்வெல/ குறுகுபுறா
4) அம்பாந்தோட்டை மாவட்டம்
• மதுனாகல ( மகாபெலஸ்ஸ, சூரிய)
இதேவேளை பொலநறுவையின் நெலும்வவ குளத்திற்கும், திம்புலாகலை பாதக்குன்றிற்கு அருகாமையிலும் புதிதாக ஒரு வெப்பநீரூற்றும், யாழ்மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு புனிதநகர் என்னும் பகுதியில் ஒரு வெப்பநீரூற்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் காணப்படும் வெப்பநீரூற்றுக்கள் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் ஈர்ப்பனவாக உள்ளமையால் இன்று அவை பெரும் சுற்றுலாத் தலங்களாக உருவாகி வருகின்றன.
கண்ணியா வெப்பநீருற்று
மகாஓயா வெப்பநீருற்று
வகாவா வெப்பநீருற்று
மதுனாகல வெப்பநீருற்று
நெலும்வெவ வெப்பநீருற்று
Article by ;- AKSHAYAN
(இவ்வருடத்தில் கடந்த வருடங்களைப் போன்று தொடர்ந்தும் ஆக்கங்களை எழுத முடியாமல் போனமையையிட்டு மனம் வருந்துகின்றேன். பலர் தங்களுடைய சந்தேதகங்கள் தொடர்பாக வினாவியிருந்தீர்கள். ஒரு சிலருக்கே என்னால் பதிலளிக்கக்கூடியதாயிருந்தது.
பாடசாலை மற்றும் பிற இணையத்தள வடிவமைப்புக்கள், மானிடப் புவியியலுடன் தொடர்புடைய உயர்தர பாடப் புத்தகங்களை எழுதிக் கொண்டிருக்கின்றமை, உடல்நலம் தொடர்பாக ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கின்றமை போன்ற காரணங்களினால் தொடர்ச்சியாக ஆக்கங்களை இணையத்தளத்தில் எழுத முடியாமல் போய்விட்டது.
இன்றிலிருந்து மீண்டும் என்னுடைய வேலைகள் சிலவற்றை ஒதுக்கி வைத்துவிட்டாவது, தொடர்ந்தும் புவியியில் தொடர்பான ஆக்கங்களை எழுதவிருக்கின்றேன். உங்கள் அன்பான ஆதரவிற்கு எனது நன்றிகள். தொடர்ந்தும் இணைந்திருங்கள் .
என்றும் ............. அக்ஷயன்)